Saturday, December 22, 2007
சந்தேக கேஸ்ஸில் - சாண்டா க்ளாஸ்
சிறு வயது முதல் அனைத்து கிறிஸ்துமஸ்களுக்கும், விடுமுறையை மட்டுமே கொண்டாடியிருக்கிறேன். இந்த வருடம் அலுவலக நண்பர்கள் மூலம் உண்மையான பண்டிகையை கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தது. சந்தோஷத்தில் புல்லரிக்க வைக்கிறார்கள். அத்தனையும் உற்சாகம் நிரம்பி வழியும் கொண்டாட்டங்கள். நிறைய 'டெக்கரேசன்' பொருட்களை இப்ப தான் பார்க்கிறேன்,பார்த்ததிருந்த சிலவற்றிக்கு பெயர்கள் தெரிய வந்தது.அலுவலகம் முழுவதுக்கும், அலங்காரம் செய்யும் போட்டி நடத்தினோம். அசத்திவிட்டார்கள்.
கிறிஸ்துமஸ் தாத்தா ! இவர் என்னுடைய சந்தேக கேஸ்ஸில் பல நாட்களாக இருப்பவர். இவர் போய் அனைவருக்கும் பரிசு கொடுப்பார், இரவில் தூங்கி காலையில் எழுந்தால் வெளியே வைத்திருந்த கிறிஸ்துமஸ் மரத்தில் பரிசுப்பொருட்கள் வைத்துச் செல்வார் என்று கதைகள் சொல்வார்கள். என்னுடைய சந்தேகம் எல்லாம் ஊரில் உள்ள அத்தனை மரத்திற்கும் எப்படி வைப்பார் அவ்வளவு பணம் யார் ஸ்பான்ஸர் செய்வார்கள் என்பதுதான். என்ன, செய்கிறார்கள் என்றால், சில நாட்கள் முன்னமே எல்லோரிடமும் பரிசுகள் சேகரித்துவிடுகிறார்கள். பின்னர், ஒருவருக்கு தாத்தா வேடம் போட்டு, பரிசுகள் கொடுத்த எல்லோருக்கும் வேறயாரோ அளித்த பரிசை கொடுக்க செய்கிறார்கள்.
நமக்கு என்ன பரிசு வருமோ என்ற எதிர்பார்ப்பும், கிறிஸ்துமஸ் தாத்தா கையில் வாங்கும் பெருமையும் அந்த 'கிறிஸ்துமஸ் கரோல்' எனப்படும் உற்சவத்தை
உற்சாகம் ஆக்குகிறது.
அலுவலகம் முழுவதும் தாத்தாவை முன்ன விட்டு, பின்னாடி பாட்டு பாடி கொண்டே சென்றது நல்ல அனுபவம் தான். "ஹூரே, ஹூரே, இட்ஸ் ஏ ஹோலி ஹாலிடே" பாட்டு எனக்குப் பிடித்திருந்தது. ஒரு வழியாக ஆர்பாட்டம் முடிந்து வந்து அமர்ந்தால், "இந்த நான் பொரடக்ட்டிவ் அவர்ஸ்க்கு" டைம் எவ்வளவு போட என்று சந்தேகம். ஆனால் , சாண்டா க்ளாஸ்ஸை என் சந்தேக கேஸ்ஸில் இருந்து எடுத்து விட்டேன். மெர்ரி எக்ஸ்-மஸ்.
அன்புடன்,
மணி.ஜி
Wednesday, December 19, 2007
நெல்லை இளைஞர் அணி மாநாடு:
மணி 11.00 ஐ நெருங்கியிருக்கும். நின்றிருந்த காக்கிச்சட்டைகளுள் மூவர் சாலையை மறித்து போய்கொண்டிருந்த ஒரு பேருந்தை பேருந்து நிலையத்திற்குள் போகச் சொல்ல, சர்ச்சை இனிதே தொடங்கியது. தங்கள் தோழனை அடித்து விட்ட,பக்கத்து ஏரியா ஆட்களை தாக்கப் போவது போல் வண்டியில் இருந்து குதித்தனர். அந்த இரு காக்கிச்சட்டைக்லும் சூழப்பட்டனர். உடன்பிறப்புகள் உதார் விட,காக்கிச்சட்டையினர் கண்ணியம் காத்தனர். ஆனாலும், மற்ற காவலர்கள் அனைத்து வண்டிகளையும் உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தனர். அனைத்து தொண்டர்களும் தொடை தட்டி இறங்கி ரோட்டொரம் வந்தனர். நிலைமையின் பல்ஸ் எகிற ஆரம்பித்தது.
காரணம், முதல்வரோ,வாரிசுகளோ கடக்க இருப்பதால் இத்தனை கெடுபிடி. 50 வாகனங்கள் மடக்கப்பட்டுவிட்டன. எஸ்காட் வண்டிகள் வெள்ளோட்டம் விட்ட படி பறந்தன. காவலர்களோ "நாங்கள் ஒரு சல்யூட் மட்டும் வச்சி இங்கிருந்து கடத்தியாச்சுன உங்கள விட்ருவோம் கொஞ்சம் கீழ இறங்கி நில்லுங்கனு" கெஞ்சிக்கொண்டிருந்தனர். வண்டியை ஸ்டார்ட் செய்து, உறுமிக்கொண்டிருந்தனர் இளைஞர் அணியினர்.காவலர்கள் முன்னாடி நின்று தடுக்க வேண்டிருந்தது.
"தலைவர்கள் க்ராஸ் பண்ற வரைக்கும் பொறுக்க மாட்டாய்ங்களோ?"கொஞ்சம் விவரமான கட்சிகாரர்களே தலையில் அடித்துக்கொண்டனர். ஆனால் யார் வருகிறார்? என்று பல ஊகங்கள் உலாவின.கலைஞரா மட்டும் இருக்காது,அவரால வேன்ல போகமுடியாது என்பதுதான் ஒருமுக கருத்து. இன்னும் சில suv(ஸ்கார்ப்பியோ,குவாலிஸ்,இன்னோவா) க்கள் பறந்து கடக்க, ஒரு ஹரி படம் பார்த்த மாதிரி இருந்தது. அத்தனை வேகம்,அத்தனை எண்ணிக்கை. ஆகா, நள்ளிரவில் சூரியனேவா? ஆமாம் மக்கள் கருத்தை முறியடித்து கலைஞரே வந்து கொண்டிருந்தார்.
"மாண்புமிகு டாக்டர் கலைஞர்" -வாழ்க! கோஷ்டி கோஷம் போட்டது. மக்கள் கூட்டம் மலைத்து நின்றது.காக்கிச்சட்டைகள் சல்யூட் வைத்தன. சாணக்கியம் சைகை காண்பித்தது. பளிச்சென்றிருந்த சூரியன், சைகைக் கதிர் பரப்பிக்கொண்டே தெற்கே தோன்றி வடக்கே மறைந்தது.கோஷ்டி கிளம்ப ஆயத்தமானது.போட்ட கோஷம் என்ன தெரியுமா?
"போலிஸ் அராஜகம் " - "ஒழிக!". கலைஞர் கையில் இருக்கும் துறை, சாமிகளா அது. நிஜமாவே, உங்க அரசியல் லாஜிக் புரியல "சாமியோவ்"!. இந்த அலுவலகம் செல்லும் பெண்களை பார்த்ததுண்டா? வேலை முடிந்து லேட்டாப்போனா, கிளம்பும் போது தனியே தள்ளிப் போய் அப்பா,அண்ணன்,கணவன், இதில் ஏதேனும் ஒரு மார்களுக்கு போன் செய்வதுண்டு பாதுகாப்பிற்காக. 'வைஜேந்தி'காக்கிச்சட்டை ஒன்று அதெபோல் , தனியே வந்து மொபைலிக் கொண்டிருந்தது. அட, நீங்ககூடவா?
ஒரு முக்கால் மணி நேரம் கழித்து பேருந்துகள் வர, கலைஞரை கண்ட மகிழ்ச்சியில், பொது மக்களுள் ஒருவாரகிய நாம் பேருந்து ஏறி கரை சேர்ந்தோம்.
அன்புடன்,
மணி.ஜி
Monday, December 17, 2007
நெல்லை இளைஞர் அணி மாநாடு: நெடுஞ்சாலையிலிருந்து ஒரு ரிப்போர்ட்.
மதுரை ---- கோவில்பட்டி ---- நெல்லை --- திருவனந்தபுரம்.
இந்த NHல் சரியாக 'கோவில்பட்டி'ன்ற இடத்தில் நிற்கிறோம். நாம ரிப்போட்டர் எல்லாம் இல்லீங்க. பொது ஜனத்தோடு திருவனந்தபுரம் செல்வதற்காக, அந்த நெடுஞ்சாலையின் அப்போதைய பல்ஸ் தெரியாமல் பஸ்ஸுக்காக நிற்கிறோம். அய்யோ! தி.மு.க.வின் நெல்லை இளைஞர் அணி மாநாடு முடிந்து திரும்பும் நேரம்மல்லவா இது. திருவனந்தபுரம் திட்டத்தில் தற்காலிக சறுக்கல்.
விகடனின் ஒத்துழைப்பால் ஒரு அரை மணி நேரம் கடத்தி ஆகிவிட்டது. விசாரித்ததில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மதுரைக்கருகில் நெல்லை நோக்கி செல்ல வேண்டிய பேருந்துகள், நிறுத்தப்பட்டுள்ளது தெரிய வந்தது. 20 காக்கிச்சட்டை காரர்கள் அங்கு உலாவுவதை காண்கிறோம். அதற்குள், சுமார் 200 பேருந்துகள் மதுரை நோக்கி சீறி பாய்ந்து இருந்திருக்குமே என்றும் எண்ணிப்பார்க்கிறோம். ஆக,அந்த நான்கு வழிச் சாலையில், ஒரு வழியில் ஒரு திசையில் மட்டுமே போக்குவரத்து(!) இயங்கிக் கொண்டிருக்கிறது.மனம்,சூழ்நிலைக்கு தாவுகிறது. சுவாரசியமான
சம்பவங்கள் நடந்தேறின.
ஒரு புள்ளியில் நின்று கொண்டு அனைத்து மாவட்ட அரசு பேருந்துகளையும் காண முடிந்தது.தனியார் பேருந்துகள் வாடகைக்கு தர பெரும்பாலும் மறுத்துவிட்டார்களாம். ஆனாலும் கழகத்துகார நிறுவன டவுண் பஸ்களைகூட வடக்கு மாவட்டங்களிருந்தெல்லாம் இவ்வளவு தூரம் ஓட்டியோ,உருட்டியோ கொண்டு வந்திருந்தார்கள்.
இளைஞர் அணி இளசுகளில்(!) 70% தொப்பை உள்ளவர்கள்.ஆர்டர் செய்து ஒன்று போல் அணிந்திருந்த 'டி-சர்ட்'டின் முன்புறம் வரைந்திருந்த வட்ட வடிவ லோகோ தொப்பைகளை நன்றாக எடுத்துக்காட்டியது. வயதும் 40 -45 இருக்கும். (யூத் தாம்மாம்). விசில், 'பெரிய','சின்ன' வாரிசுகள் வாழ்க! கோசங்கள், கண்களில் பசி இவைதான், அங்கு நின்று கொண்டிருந்த ஏதோ ஒரு ஊர் உடன்பிறப்புகளின் நிலை.
ஸ்கார்ப்பியோ, இன்னோவா, குவாலிஸ் அதிகம் கடந்து பறந்து சென்ற வாகனங்கள். சுமோ! சும்மா ஆகி விட்டது போல. ஒரு பொறியியல் கல்லூரியின் மினிபஸ்ஸும் தி.மு.க கொடியுடன் சென்றது. பாதி வாகனங்களில் விடியோ ஓடிக்கொண்டிருந்தது. அதில், பாதி புது படங்களாக இருக்கலாமென்று நினைக்கிறோம். சாட்சியாக, நாம் கவனித்தது , 'மருதமலை'. 'கலைஞரை' மதிக்கும்
திரைஉலக கலைஞர்கள் கவனிக்க வேண்டிய இடம்.
நீங்கள் ஆவலுடன் எதிர் பார்க்கும் ஏதேனும் சர்ச்சை இன்னும் சில வரிகளுக்குப்பின்.
நம் கவனம்,லேப்டாப் ம்ற்றும் பேக்கை சரி பார்த்தபின் நின்ற பொது மக்களின் மேல் விழுகிறது. அட,நம்ம ஊர் பெண்கள் மாறிட்டாங்கப்பா. அதிசயம், கணவர்களை இப்படி நிறுத்தியதற்காக கரிச்சுக் கொட்டாமல் நின்றார்கள். கேட்டால், என்ன செய்ய?இதில் இருந்து கற்று கொள்ள வேண்டியதுதான் என்கிறார்கள்.ஓ! கார்ப்பரேட் வேல்ட். எதையும் 'Learning Experience' அ எடுத்திப்பிங்க!. நல்லதுதான்.
சுவரசியமான சர்ச்சையுடன் அடுத்த பதிவு.
அன்புடன்,
மணி.ஜி
Thursday, November 29, 2007
வயசுப்பையன் தனியே இருட்டில்
அலுவலகம் முடிந்து அன்று கொஞ்சம் தாமதமாக கிளம்பினேன்.வெளியே வந்தவுடன் ஒரு எண்ணம், இன்று பேருந்து நிறுத்ததிற்கு புது வழியில் செல்லலாம் என்று.சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் என்று
மனது கணக்கிட்டது.
மணி ஏழு.இந்த நேரம் அந்த வழி செல்லலாமா? என்ற கேள்வி முளைத்தது. என்னுடைய தோழியர் சிலர் இந்த வழியில் செல்வார்கள் என்று கேள்விப்பட்டதுண்டு. பெண்களுக்கே சரியென்றால், "வயசுப்பையன்" நமக்கு பிரச்சனையில்லை. அதுவும் இன்றி நிறைய அலுவலகம் முடிந்து செல்லும் வாகனங்களை கண்டேன்.கால்கள் நடை போட்டன.
எப்பொழுதும் வண்டி ஏற்றிச் செல்லும் நண்பன் ஊரில் இல்லை. மனக்கண்முன் அவன் முகம் வந்து மறைந்தது. கேரளத் தலைநகரின்
முக்கிய வியாபார ஸ்தலத்திலிருந்து தொடங்கும் அந்தப் பாதை ஒரு முக்கிய சாலையில் போய் சேரும்.பகலில் போனதுண்டு. பேருந்து கடந்து
சென்றது.இரு சக்கர வாகனங்கள் கடந்து சென்றன.
கேரளத்தை வரைபடத்தில் மட்டுமே சமவெளியாக காணலாம். பாதையின் இரு பக்கமும் மேடா?மலையா? என்று இனங்காண முடியவில்லை.
அதன் தளத்திலே சில வீடுகள்.மனிதர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. மெச்சிக்கொண்டேன், தெரு விளக்குகள் இருப்பதைக்கண்டு.
ஒரு 50 மீட்டர் சென்றவுடன், இடப்பக்கம் சாலை திரும்பியது.......
ஒரு நீண்ட சாலை கண்ணில்பட்டது என்றுதானே எழுதவேண்டும்? அவ்வாறு எழுத முடியாத அளவு கும்மிருட்டு. ஆங்காங்கே,
பொட்டு பொட்டாக வெளிச்சம். மிக நீண்ட இடைவெளிகளில் தெருவிளக்குகள். கேரளாவின் நிறம் என்னவென்று கேட்டால், அரசியல் சார்ந்தவர்கள் சிவப்பு என்பார்கள், சுற்றுலா சென்றவர்கள் பச்சை என்பார்கள். என்னைக் கேட்டால் இருளின் நிறம் என்பேன்.(கருப்பு நிற கோண்டா ஆக்டிவா அதிகம் காணப்படும் வாகனம்)
எதிரே வந்த வாகனம், வேகத்தடையில் நின்று என்னை பார்த்து இளித்து விட்டு போனதாக உண்ர்ந்தேன். கொஞ்சம் தள்ளி பேருந்துக்கு காத்திருப்பது போல் சிலர்.அவர்கள் அந்த இருட்டை பொருட்டாக மதிக்கவில்லை என்பது தெரிந்தது. அந்த சாலையிலும் கூட பேருந்து வருமா என்ற சந்தேகத்தில் நடக்கலாயினேன்.
இயற்கையிடம் மட்டுமே உணரக்கூடிய இருளும் அமைதியும் கைகோர்த்து என்னை சுற்றி வலம் வந்தது. அச்சமா ஆனந்தமா தெரியவில்லை அவ்வளவு
அற்புதமான மனநிலை. நான் மூச்சை இவ்வளவு சத்தமாகவா விடுவேன்? என் உடலில் இவ்வளவு குளிர்ச்சியை நான் உணர்ந்ததில்லை. ஆகா! இவ்வளவு,
அவ்வளவு என்ற எல்லையின்மையை அறிய வேண்டும் என்று ஞானிகளின் புத்தகங்களில் படித்ததுண்டு.அறிந்து கொண்டேன். இரு பரபரப்பான நகரப்புள்ளிகளுக்கிடையில் இப்படி ஒரு இடமிருந்தது ஆச்சிரியமூட்டியது. அற்புதங்களையும்,ஆச்சிரியங்களையும் மூச்சுமுட்ட குடித்துக்கொண்டேன்.கேரளா கடவுளின் தேசம் தான்.
அவ்வாறாயின் கடவுள் எங்கே கேட்டது மனது எல்லையின்மையை அறிந்தபின்னும்கூட.கடவுள் கண்முன் தோன்றினார்.
ஆம், ஒரு கிறிஸ்துவ ஆலயத்துடைய சிலுவை மிதமான வெளிச்சத்தில் சிலிர்க்கச்செய்தது. மக்கள் வணங்கி கொண்டிருந்தனர். முக்கியச்சாலை வந்துவிட்டது.
செல்ல வேண்டிய பேருந்தை பார்த்தவுடன்தான் பணத்தை பரிசோதித்தன கைகள்.இயற்கை தந்த பல ஆச்சரியங்களுடன், ஆகா! ஒரு வயசுப்பையன் இருட்டில் இழப்பின்றி வரமுடிகிறதே என்ற உபரி ஆச்சரியத்துடன் மக்களோடு மக்களாக கலந்து பயனமானேன்.
Tuesday, November 27, 2007
'முடியல'த்துவத்தின் முக்கியத்துவம்.
"சொப்பாாா...... முடியல" வடிவேலு சார் தந்த வரப்பிரசாதம்னா நம்புவீங்களா?
என்னன்னு நான் பேசுரத கேளுங்க,அப்புறம் நம்புவீங்க.
அதன் தலைப்பு என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது.
வடிவேலு சார் டைப்பிலேயே பேசுவோம்.
இதுக்கெப்பறம் நமக்கு அவர் Style வராதப்பா..இனி நம்ம style.
இம்சை அரசன் பாத்துக்கலாம்
வின்னர் பாத்துக்கலாம்
வாங்கியச்சு.சீட்டுல போய் உட்கார்ந்திட்டு, (சிகரெட் பிடிப்பவர்களிடம் படிக்க வேண்டிய ஒரே நல்ல விஷயம்)ஒரு puff யை இழுக்கும் முழு நிதானத்துடன், ஒரு பெரு மூச்சை விடும் கால அளவோடு, மனசிலும், நினைப்பிலும், வடிவேலுவை கொண்டு வந்து அவருக்கான முறையுடன்,
"சொப்ப்பாாாா....முடியல" னு சொல்லிடுங்க... சொல்லிப்பாருங்க>>
அவ்வளவுதான் தெரபி முடிஞ்சது.
எஸ்கேப் ஆயிருடா கைபிள்ள!!
அன்புடன்,மணி.ஜ
Saturday, November 10, 2007
Thursday, October 18, 2007
மதமும் மனிதனும்
"மதமும் மனிதனும்" என்னும் தலைப்பில் மனிதனுக்கும், மதங்களுக்கும் உள்ள நீண்ட கால உறவை தொகுத்தளிக்கும் ஒரு முயற்சி.
இதை என் தனிப்பட்ட ஆர்வத்தை தணிக்கும் ஒரு வாய்ப்பாகவும் கருதுகிறேன். இதை நான் பதிவிடும் பொழுது இந்த பதிவுக்கென்று வாசகர்கள் அவ்வளவு கிடையாது. இத்தொடர் முடியும் பொழுது எத்தனை வாசகர்களை சென்றடையும் என்று பார்ப்போம்.
அன்புடன்,
மணி.ஜி
Sunday, August 26, 2007
மாதம் ஒருமுறை,,,,,,
மாதம் ஒருமுறை நடக்கும் குண்டு வெடிப்புகள் பற்றியது....
தினசரி சந்தை நிலவரங்கள், நிறுவனங்களின் காலாண்டு நிதியறிக்கைகள் போன்று இதுவும் ஒரு periodical news ஆகிவிட்டது. மாதம் ஒருமுறை அல்லது இருமாதத்துக்கு ஒருமுறை இது போன்று ஒரு news வந்துவிடுகிறது. இதை பழகிவிட்டோம் என்றால், பிரச்சனையின் தீவிரத்தை நாம் மறக்க வாய்ப்புள்ளது.
சரி, என்ன செய்யலாம்?

