Thursday, November 29, 2007

வயசுப்பையன் தனியே இருட்டில்

அலுவலகம் முடிந்து அன்று கொஞ்சம் தாமதமாக கிளம்பினேன்.வெளியே வந்தவுடன் ஒரு எண்ணம், இன்று பேருந்து நிறுத்ததிற்கு புது வழியில் செல்லலாம் என்று.சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் என்று
மனது கணக்கிட்டது.
மணி ஏழு.இந்த நேரம் அந்த வழி செல்லலாமா
? என்ற கேள்வி முளைத்தது. என்னுடைய தோழியர் சிலர் இந்த வழியில் செல்வார்கள் என்று கேள்விப்பட்டதுண்டு. பெண்களுக்கே சரியென்றால், "வயசுப்பையன்" நமக்கு பிரச்சனையில்லை. அதுவும் இன்றி நிறைய அலுவலகம் முடிந்து செல்லும் வாகனங்களை கண்டேன்.கால்கள் நடை போட்டன.
எப்பொழுதும் வண்டி ஏற்றிச் செல்லும் நண்பன் ஊரில் இல்லை. மனக்கண்முன் அவன் முகம் வந்து மறைந்தது. கேரளத் தலைநகரின்
முக்கிய வியாபார ஸ்தலத்திலிருந்து தொடங்கும் அந்தப் பாதை ஒரு முக்கிய சாலையில் போய் சேரும்.பகலில் போனதுண்டு. பேருந்து கடந்து
சென்றது.இரு சக்கர வாகனங்கள் கடந்து சென்றன.
கேரளத்தை வரைபடத்தில் மட்டுமே சமவெளியாக காணலாம். பாதையின் இரு பக்கமும் மேடா
?மலையா? என்று இனங்காண முடியவில்லை.
அதன் தளத்திலே சில வீடுகள்.மனிதர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. மெச்சிக்கொண்டேன்
, தெரு விளக்குகள் இருப்பதைக்கண்டு.
ஒரு 50 மீட்டர் சென்றவுடன்
, இடப்பக்கம் சாலை திரும்பியது.......

ஒரு நீண்ட சாலை கண்ணில்பட்டது என்றுதானே எழுதவேண்டும்? அவ்வாறு எழுத முடியாத அளவு கும்மிருட்டு. ஆங்காங்கே,
பொட்டு பொட்டாக வெளிச்சம். மிக நீண்ட இடைவெளிகளில் தெருவிளக்குகள். கேரளாவின் நிறம் என்னவென்று கேட்டால், அரசியல் சார்ந்தவர்கள் சிவப்பு என்பார்கள், சுற்றுலா சென்றவர்கள் பச்சை என்பார்கள். என்னைக் கேட்டால் இருளின் நிறம் என்பேன்.(கருப்பு நிற கோண்டா ஆக்டிவா அதிகம் காணப்படும் வாகனம்)

எதிரே வந்த வாகனம், வேகத்தடையில் நின்று என்னை பார்த்து இளித்து விட்டு போனதாக உண்ர்ந்தேன். கொஞ்சம் தள்ளி பேருந்துக்கு காத்திருப்பது போல் சிலர்.அவர்கள் அந்த இருட்டை பொருட்டாக மதிக்கவில்லை என்பது தெரிந்தது. அந்த சாலையிலும் கூட பேருந்து வருமா என்ற சந்தேகத்தில் நடக்கலாயினேன்.

இயற்கையிடம் மட்டுமே உணரக்கூடிய இருளும் அமைதியும் கைகோர்த்து என்னை சுற்றி வலம் வந்தது. அச்சமா ஆனந்தமா தெரியவில்லை அவ்வளவு
அற்புதமான மனநிலை. நான் மூச்சை இவ்வளவு சத்தமாகவா விடுவேன்
? என் உடலில் இவ்வளவு குளிர்ச்சியை நான் உணர்ந்ததில்லை. ஆகா! இவ்வளவு,
அவ்வளவு என்ற எல்லையின்மையை அறிய வேண்டும் என்று ஞானிகளின் புத்தகங்களில் படித்ததுண்டு.அறிந்து கொண்டேன். இரு பரபரப்பான நகரப்புள்ளிகளுக்கிடையில் இப்படி ஒரு இடமிருந்தது ஆச்சிரியமூட்டியது. அற்புதங்களையும்,ஆச்சிரியங்களையும் மூச்சுமுட்ட குடித்துக்கொண்டேன்.கேரளா கடவுளின் தேசம் தான்.

அவ்வாறாயின் கடவுள் எங்கே கேட்டது மனது எல்லையின்மையை அறிந்தபின்னும்கூட.கடவுள் கண்முன் தோன்றினார்.

ஆம், ஒரு கிறிஸ்துவ ஆலயத்துடைய சிலுவை மிதமான வெளிச்சத்தில் சிலிர்க்கச்செய்தது. மக்கள் வணங்கி கொண்டிருந்தனர். முக்கியச்சாலை வந்துவிட்டது.

செல்ல வேண்டிய பேருந்தை பார்த்தவுடன்தான் பணத்தை பரிசோதித்தன கைகள்.இயற்கை தந்த பல ஆச்சரியங்களுடன், ஆகா! ஒரு வயசுப்பையன் இருட்டில் இழப்பின்றி வரமுடிகிறதே என்ற உபரி ஆச்சரியத்துடன் மக்களோடு மக்களாக கலந்து பயனமானேன்.

No comments: